புதன், மார்ச் 23

நீங்கள் நேற்றுவரை நித்திரையில் ஆழ்ந்திருந்தால்.....



அதிகாலை நிகழ்த்தும் அற்புதங்கள் பல. உதித்து உயர்ந்தெழும் சூரியன், மலர்களை மட்டுமா மலரச் செய்கிறது… வாழ்க்கையில் உயர விரும்பும் பலரையும் மலரச் செய்யும் பொழுதல்லவா அது! 


நீங்கள் நேற்றுவரை நித்திரையில் ஆழ்ந்திருந்தால் இனியாவது அதிகாலையின் அதிசயங்களை அனுபவிக்க விடி காலையிலேயே விழித்தெழுங்கள். ஆமாம்…காலையில் துயில் எழும் பழக்கம் நமக்கு பல்வேறு நன்மைகளைத் தருகின்றன. `அதிகாலையில் எழுவது ஆரோக்கியமும், அறிவும் தரும்’ என்கிறார் பிராங்கிளின். 

சீக்கிரம் எழுந்தால் அதிகாலையை போன்ற அமைதி உங்களிடமும் ஒட்டிக் கொள்ளும். வாகன இயக்கம், ரேடியோ, டி.வி. இரைச்சல், பக்கத்து வீடுகளின் கூச்சல், குழந்தைகளின் அழுகுரல் என்று எதுவும் உங்களுக்குத் தொந்தரவு செய்யாது. எங்கும் அமைதி நிலவ நீங்கள் நிம்மதியாக செயல்படலாம். அதிகாலையை போன்ற அருமையான பொழுதை வேறு எப்போதும் அனுபவிக்கவே முடியாது. 

அந்த வேளைதான் சிந்திக்க, செயல்பட, படிக்க, சுவாசிக்க என பலவற்றுக்கும் ஏற்றது. காலையில் படுக்கையில் இருந்து துள்ளிக்குதித்து எழுந்திருங்கள். சோம்பேறித்தனமாக எழுந்தால் அன்றைய தினமே சோம்பலாகத்தான் இருக்கும். அவசரம் அவசரமாக வேலைகளை செய்ய வேண்டிவரும். பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதில் சிரமம் ஏற்படும். 

பிறகு அலுவலகத்திற்கு கிளம்ப தாமதம் ஆகும். இப்படி அடுக்கடுக்கான சிரமங்கள் தொடர, நிம்மதியே போய்விடும். சீக்கிரமாக எழுந்துவிட்டால் பாதி வேலையை சூரியன் உதிக்கும் முன்பே முடித்துவிட்டு நிதானமாக இருக்கலாம். இதனால் மகிழ்ச்சியாக ஆரம்பிக்கும் நாள் இறுதிவரை இன்பமாகவே தொடரும். 

காலையில் சீக்கிரம் எழுந்திருந்தால் காலை உணவை நிதானமாக சமைத்து ருசித்து சாப்பிடலாம். காலை உணவு, நலமான வாழ்வுக்கு தினமும் சாப்பிடும் உற்சாக டானிக் போன்றது. சுறுசுறுப்புக்கும் உதவும். சோம்பேறித்தனமாக படுத்திருந்து காலை உணவை சாப்பிடும் நேரத்திற்கு எழுந்திருந்தால், பணிக்குச் செல்லும் அவசரத்தில் உணவை தவிர்க்கும் சூழல் கூட வரும். 

இதனால் எரிச்சலும், சோம்பலும் ஒட்டிக் கொள்ளும். காலையில் எழுந்து `ஹாயாக’ அமர்ந்து டீ குடித்துக் கொண்டே பேப்பர் படித்துவிட்டு பரபரப்பில்லாமல் காலை உணவைச் சாப்பிட்டால் கிடைக்கும் சுகமே சுகம். தேகபயிற்சி செய்ய உகந்ததும் காலை பொழுதுதான். மற்ற நேரங்களைவிட அதிகாலை வேளை தான் உடற்பயிற்சிக்கு ஏற்ற வேளை. 

நலமாக வாழ்வதற்காக நாம் செய்ய வேண்டிய கடமைகளில் ஒன்று உடற்பயிற்சி. அதனால் கிடைக்கும் பலன்களும் பலபல. காலையில் உடற்பயிற்சி செய்வதை எந்தக் காரணத்திற்காகவும் நிறுத்தாதீர்கள். காலை வேளையிலேயே எழுதுவது, மெயில் பார்பது போன்ற சின்னச் சின்ன வேலைகளை செய்து முடித்தால் நேரத்தை மிச்சம் பிடிக்கலாம். அந்த நேரத்தை குடும்பத்தினருடன் ஜாலியாகக் கழிக்கலாம்.

உங்கள் லட்சியத் திட்டங்கள் பற்றி அதிகாலையில் சிந்தியுங்கள். அப்போது குழப்பங்களுக்குக் கூட தெளிவான வழி கிடைக்கும். எழுந்தவுடன் அன்று முடிக்க வேண்டிய வேலைகளை பட்டியலிட்டுக் கொள்ளுங்கள். உடனே லட்சிய பயணத்தை தொடங்குங்கள். வெற்றி நிச்சயம் கிடைக்கும். ஒவ்வொரு வேலையையும் சரியாகச் செய்து முடிக்க வேண்டுமானால் அதற்கு காலையில் எழுவது தான் சரியான செயல்.

ஒரு வேலையில் தாமதமானாலும் அடுத்தடுத்த தாமதங்கள் உங்கள் மதிப்பை குறைப்பதோடு, வேலைகளையும் முடக்கும். நீங்கள் சொல்வதெல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது. காலையில் எழுந்திருக்கத்தான் முடியவில்லை என்கிறீர்களா? அது ஒன்றும் பெரிய காரியமில்லை. முதலில் சில நாட்கள் அலாரம் வைத்து எழுந்திருக்கலாம். 

அலாரத்தை படுக்கையில் வைத்தால் மனம் அணைத்துவிட்டு தூங்கத்தான் சொல்லும். எனவே எழுந்து சென்று `ஆப்’ செய்யும் தொலைவில் அலாரத்தை வையுங்கள். இரவில் 2 டம்ளர் தண்ணீர் பருகிவிட்டு படுத்தால் காலையில் தானாகவே எழுந்திருப்பீர்கள். எழுந்தவுடன் மீண்டும் படுக்காமல் வேலை செய்யத் தொடங்கிவிட்டால் சோம்பல் ஓடியே போகும்.

2 கருத்துகள்: