செவ்வாய், ஏப்ரல் 5

சிறந்த கப்டன்!!!



உலக கோப்பை போட்டியில் இந்திய அணி கேப்டன் டோனி சரியாக விளையாடவில்லை என்று அவர் மீது விமர்சனம் இருந்தது. 

மிக மிக முக்கியமான நேற்றைய இறுதிப்போட்டியில் அவர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி விமர்சனங்களை தகர்த்து எறிந்தார். 

அதோடு தான் மிகவும் பொறுப்பான கேப்டன், சிறந்த கேப்டன் என்பதை உணர்த்தினர். எளிதில் உணர்ச்சிவசப்படாத அவர் நேற்று பலமுறை தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்தினார். 

இதற்கு காரணம் ஆட்டம் உலக கோப்பை இறுதிப்போட்டி என்பது தான். 275 ரன் இலக்கு என்ற நிலையில் இந்தியா ஆடியது. 31 ரன் எடுப்பதற்குள் (6.1 ஓவர்) தொடக்க வீரர்கள் ஷேவாக் (0), தெண்டுல்கர் (18) ஆட்டம் இழந்தனர். 

இதனால் ரசிகர்கள் மிகவும் சோர்ந்துவிட்டனர். 3-வது விக்கெட்டுக்கு காம்பீருடன், வீராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி பொறுப்புடன் ஆடியதால் ரசிகர்களுக்கு சிறிது நம்பிக்கை ஏற்பட்டது. அது மிகுந்த நேரம் நீடிக்கவில்லை. 

ஸ்கோர் 114 ஆக இருந்தபோது (21.4 ஓவர்), கோலி 35 ரன்னில் ஆட்டம் இழந்தார். இந்த நேரத்தில் யுவராஜ் தான் களம் வரவேண்டியது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் கேப்டன் டோனி 5-வது வீரராக களம் வந்தார். 

பொறுப்பான கேப்டன் என்பதை அவர் வந்த பிறகு தான் தெரிந்தது. தொடக்கத்தில் மெதுவாக ஆடிய அவர் நேரம் செல்ல முரளீதரன், மலிங்கா பந்தை விளாசி தள்ளினார். அதோடு விக்கெட் விழுந்து விடக்கூடாது என்று காம்பீருக்கு பல முறை அறிவுரை கூறினார். 

காம்பீர் பந்தை தூக்கி அடிக்கும் போது டோனி அவரை அழைத்து ஆக்ரோஷத்துடன் அறிவுரை வழங்கினார். ஒவ்வொரு ரன்னாக எடுக்குமாறு கூறினார். இதை ஏற்று அவரும் அப்படி ஆடினார். ஒரு கட்டத்தில் காம்பீர் அதிரடியாக ஆடநினைத்து 97 ரன்னில் அவுட் ஆனார். காம்பீர்-டோனி ஜோடி 109 ரன் எடுத்தது. 

அடுத்து வந்த யுவராஜ்சிங்குக்கும், டோனி பலமுறை அறிவுரை வழங்கினார். ரன்அவுட் ஆகப்போகும் நிலை வந்தபேது அவர் அதிகமாக உணர்ச்சி வசப்பட்டார். அதே நேரத்தில் தனது பொறுப்பில் இருந்து பின்வாங்காமல் தொடர்ந்து அதிரடியாக விளையாடினார். 

குறிப்பாக பெரைரா பந்தில் சிக்சரும், மலிங்கா ஓவரில் அடுத்தடுத்து 2 பவுண்டரியும் அடித்தார். அவரே சிக்சர் அடித்து வெற்றிக்கான ரன்னை எடுத்தார். உலக கோப்பை இறுதிப்போட்டி மிகவும் முக்கியமானது. 

இந்தப்போட்டியில் டோனி தனது பொறுப்பை உணர்ந்து நிதானமாகவும், அதிரடியாகவும் விளையாடி கோப்பையை பெற்று கொடுத்தார். இதன் மூலம் தான் ஒரு சிறந்த கேப்டன் என்பதை டோனி நிரூபித்து இருக்கிறார். 

கபில்தேவ் தலைமையில் 1983-ம் ஆண்டு உலக கோப்பை கிடைத்தது. தற்போது டோனி தலைமையில் 28 ஆண்டுகளுக்கு பிறகு உலககோப்பை கிடைத்துள்ளது. 1987 உலக கோப்பையிலும் கபில்தேவ் கேப்டனாக இருந்தார். 

அந்தப்போட்டியில் அரை இறுதியில் தோற்றது. அதற்கு பிறகு 1992, 1996, 1999 ஆகிய 3 உலக கோப்பையிலும் அசாரூதீன் கேப்டனாக இருந்தார். இதில் 1996-ல் அரை இறுதியில் தோற்றது. 2003-ல் கங்குலி தலைமையிலான அணி இறுதிப்போட்டிக்கு வந்து தோற்றது. 2007-ல் டிராவிட் தலைமையிலான அணி முதல் சுற்றிலேயே வெளியேறியது. 

டோனி உலக கோப்பை போட்டிக்கு முதல் முறையாக கேப்டனாக பணிபுரிந்து கோப்பையை வென்று பெருமை சேர்த்துள்ளார். 20 ஓவர் உலக கோப்பையும் டோனி தலைமையிலான இந்திய அணி 2007-ம் ஆண்டு கைப்பற்றியது. 

அவர் தலைமையிலான டெஸ்ட் அணியும் “நம்பர் 1” இடத்தில் உள்ளது. ஆக மொத்தத்தில் இந்தியாவின் சிறந்த கேப்டன் டோனி என்று சொன்னால் அது மிகையில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக