சனி, ஜூன் 18

நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை



ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் தனது கைப்பட கடிதம் எழுதியுள்ளார். 

கடிதத்தில் அவர் எழுதியுள்ளதாவது: மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனவுடன், அன்பார்ந்த ரசிகர்களுக்கு, பேனா, பேப்பர் எடுத்து எழுதும்போது வார்த்தைகள் வரவில்லை.


எனக்கு, தமிழக அரசு எந்த நேரத்திலும் எந்த உதவியையும் செய்ய எனக்கு உறுதிமொழி கொடுத்த தமிழக முதல்வருக்கும், என்றுமே என் மீது பாசத்தை வைத்திருக்கும் என்னுடைய அருமை நண்பர் கருணாநிதியுடனும் பேசிய பிறகு உங்களுடன் பேசுகிறேன்.

முதலில் உங்களிடம் பேசாமல் இருந்ததற்கு மன்னிக்கவும். இந்த விஞ்ஞான உலகத்தில் கூட, எந்த விளையாட்டை விளையாடினாலும் காசை மேலே தூக்கிப் போட்டு, ஆட்டத்தை யார் முதலில் விளையாடுவது என்று முடிவு செய்கிறார்கள். காசை மேலே தூக்கிப் போடும்வது தான் மனிதனுடைய வேலை.

பூவாக விழுவதா, தலையாக விழுவதா என்பது ஆண்டவனுடைய செயல். என்னுடைய இந்த விளையாட்டில் ஒரு பக்கம் பணம், விஞ்ஞானம், மருத்துவம், உலகத்திலேயே மிகச்சிறந்த மருத்துவர்கள் இருக்க, இன்னொரு பக்கம், நான் நலம் அடைய கடவுள் பிரார்த்தனை, பூஜைகள், ஹோமங்கள், விரதங்கள் தான் என்னை காப்பாற்றியது என்பது தான் நூற்றுக்கு நூறு உண்மை என்பதை நான் நம்புகிறேன்.

ரஜினிக்கு எவ்வளவு மக்கள் அன்பு இருக்கிறது என்று உலகத்திற்கு காட்டிவிட்டீர்கள். நான் இப்போது குணமடைந்து கொண்டு இருக்கிறேன் என்றால், நீங்கள் எல்லோரும் என் மீது வைத்திருக்கின்ற அன்பு தான் காரணம்.

என்னை ஒரு அண்ணனாக, தம்பியாக, நண்பனாக, உங்கள் வீட்டு ஒரு பிள்ளையாக நினைத்து எனக்கு செய்த பூஜைகள் தான் காரணம். ஜென்ம ஜென்மத்திற்கும் உங்களுடைய அன்பை என்றும் மறக்க மாட்டேன். நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. இனிமேல், உங்களை மகிழ வைப்பதுதான் என்னுடைய லட்சியம். கூடிய விரைவில், ராணாவில், உங்களை மகிழ வைக்க தோன்றுகிறேன். நான், உங்களுடைய எல்லா நன்மைக்காக ஆண்டவனிடம் பிரார்த்திக்கிறேன்.

என்றும் உங்களுடையை
ரஜினி.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக