ஒரு கேரக்டருக்காக தன் உடலையே வருத்தி மாற்றிக்கொள்ளும் பிறவி நடிகன் விக்ரம், மதராசப்பட்டிணம் என்ற வித்தியாசமான படத்தை வழங்கிய இயக்குநர் விஜய் இணைந்து ட்ரெய்லரிலேயே மிரட்டும் படம் என்பதால், நீண்டநாட்களாக ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட படம்.
விக்ரமின் நடிப்பில் மற்றொரு மைல்கல் இந்தப் படம். மனவளர்ச்சி குன்றியவராக அவர் காட்டும் நடிப்புகள் அற்புதம். ஆறு வயது குழந்தையின் மனநிலை கொண்டவராக வாழ்ந்திருக்கிறார் விக்ரம். விரல்களில் ஆரம்பித்து ஒவ்வொரு நகக்கணுவும் நடிக்கின்றது. எந்த வித ஹீரோயிசமும் செய்யாமல் தெய்வத் திருமகனாக வாழ்ந்திருக்கிறார். குழாயில் ஒழுகும் தண்ணீரைக் கண்டுகொள்ளாமல் நார்மல் மக்கள் கடப்பதும், விக்ரம் அதை மூடுவதும் ஒரு நிமிடத்தில் நமக்குள் பல சிந்தனைகளைத் தோற்றுவிக்கும் காட்சி. மனைவி இறந்த செய்தி கேட்டு, அவர் கொடுக்கும் க்ளோசப் எக்ஸ்பிரசன் நம்மையும் கண்கலங்க வைக்கிறது.
தெய்வத் திருமகள் நிலாவாக வரும் குழந்தையும் நல்ல நடிப்பு. ஆனாலும் ஏதோ ஒன்று அதனிடம் மிஸ்ஸிங் தான்.
ஊட்டி கதைப்பகுதியில் காமெடிப் பொறுப்பு ஏற்பது எம்.எஸ்.பாஸ்கரும் பாண்டுயும். வழக்கமான பொண்டாட்டி மேல் சந்தேகபப்டும் காமெடி தான் என்றாலும், சீரியசான படத்தில் பெரிய ரிலீஃப் அது தான். வில்லன் வக்கீலாக வரும் நாசர் கம்பீரமாக அந்தப் பாத்திரத்திற்குப் பொருந்திப் போகிறார்.
ஜி.வி.பிரகாஷின் இசையில் பாப்பா, வெண்ணிலவே பாடல்கள் நன்றாக உள்ளன. கதை சொல்லும் பாடல் கேட்க சுமார் என்றாலும் எடுத்திருக்கும் விதம் குழந்தைகளையும் கவரும். பாட்டி வடி சுட்ட கதையை ராஜா கதியுடன் மிக்ஸ் பண்ணி விக்ரம் சொல்லும் அழகும், கிராஃபிக்ஸ் உதவியுடன் காட்டிய விதமும் அழகு.
கள்ளங்கபடமற்ற அன்பை படம் முழுதும் தெளித்து நம்மைப் பல இடங்களில் கண்கலங்க வைக்கிறார்கள். படத்தின் முக்கிய பலம் வசனங்கள். படம் நெடுகெ மெல்லிய நகைச்சுவை பரவிக்கிடக்கிறது, அதுவே இப்படத்தை ஃபீல் குட் வகையில் சேர்க்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக