சனி, ஏப்ரல் 30

கேட்மிடில்டனின் அதிஷ்ட வரலாற்றுக் குறிப்பு



பண்டைய காலங்களில் மன்னர் குடும்பத்து இளவரசர்கள் இன்னொரு மன்னர் குடும்பத்து இளவரசியைதான் திருமணம் செய்து கொள்வது வழக்கமாக இருந்தது. 

எனவே சாதாரண குடும்பத்தில் பிறந்த பெண் ராஜ குடும்பத்து இளவரசரை திருமணம் செய்து இளவரசி ஆகிவிட முடியாது. 

ஆனால் இங்கிலாந்து ராஜகுடும்பத்தை சேர்ந்த இளவரசர்கள் நீண்ட காலமாகவே தங்கள் நாட்டு குடிமக்களின் ஒரு பெண்ணையே திருமணம் செய்து கொள்கிறார்கள். 

இங்கிலாந்து பட்டத்து இளவரசர் சார்லஸ் இப்படித்தான் சாதாரண ஆசிரியையாக இருந்த டயானாவை திருமணம் செய்து கொண்டார். 

இப்போது அவர் வழியை பின்பற்றி அவருடைய மகன் இளவரசர் வில்லியமும் சாதாரண குடும்பத்து பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்த அதிர்ஷ்டத்தை பெற்றவர் கேதரின் எலிசபெத் மிடல்டன் என்கிற “கேத் மிடல்டன்.” கேத் மிடல்டனின் தந்தை பெயர் மைக்கேல் பிரான்சிஸ் மிடல்டன். தாயார் பெயர் கரோல் எலிசபெத். 



தாய்-தந்தை இருவருமே பிரிட்டிஸ் ஏர்வேஸ் விமான ஊழியர்களாக பணியாற்றியவர்கள். அப்போது அவர்களுக்குள் காதல் ஏற்பட்டு இருவரும் 1980-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அவர்களின் முதல் குழந்தைதான் கேத்மிடல்டன். 

1982-ம் ஆண்டு ஜூன் 20-ந்தேதி கேத்மிடல்டன் பிறந்தார். பெர்க்ஷயர் நகரம் அருகே உள்ள பக்குல்பரி என்ற கிராமத்தில் பெற்றொருடன் வசித்து வந்தார். கேத் மிடல்டனுக்கு ஒரு தங்கை, ஒரு தம்பி உள்ளனர். முதலில் விமான ஊழியராக வேலை பார்த்த பெற்றோர் பின்னர் வேலையை கைவிட்டு விட்டு சுயமாக தொழில் தொடங்கினர். 

விருந்துகளுக்கு தேவையான பொருட்கள் மற்றும் விழா நிகழ்ச்சிக்கான அலங்காரம் செய்யும் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனத்தை தொடங்கினார்கள். அதில் நல்ல வருமானம் கிடைத்ததால் தற்போது இந்த நிறுவனத்தின் சொத்து மதிப்பு சுமார் ரூ.200 கோடியாக உள்ளது. 

மூத்த மகள் கேத்மிடல்டன் மீது பெற்றோருக்கு அதிக பாசம் இருந்தது. அவரை அன்போடு வளர்த்தார்கள். கேத்மிடல்டன் சிறு வயதிலேயே எதிலும் தைரியமாக செயல்படுவார். கேத்மிடல்டன் பிறந்த நேரத்தில் பெற்றோர் இருவரும் ஜோர்டான் நாட்டில் அம்மானில் உள்ள பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தில் வேலை பார்த்தனர். 

இதனால் அங்குதான் அவர் மழலை பள்ளியில் சேர்ந்து படித்தார். அவருக்கு 4 வயது இருக்கும்போது இங்கிலாந்துக்கு வந்து விட்டனர். இதனால் இங்கிலாந்தில் கல்வியை தொடர்ந்தார். முதலில் பெர்க்டியர் நகரில் உள்ள ஆன்ட்ரூ பள்ளியில் தொடக்க கல்வியை பயின்றார். 

பள்ளி படிப்பு முடிந்ததும் வில்ட்ஷயர் நகரில் உள்ள மால்பரோ கல்லூரியில் சேர்ந்து படித்தார். இந்த படிப்பு முடிந்ததும் 2001-ம் ஆண்டு ஸ்காட்லாந்து சென்று அன்ட்ரூ பல்கலைக்கழகத்தில் வரலாறு பட்டப்படிப்பில் சேர்ந்தார்.அப்போது அதே பல்கலைக் கழகத்தில் இளவரசர் வில்லியமும் படித்தார். இருவரும் சந்தித்து கொண்டனர். 

இருவரும் முதலில் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். பின்னர் அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. காதல் தீவிரமாகியதும் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். 10 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்த இந்த காதல் இப்போது திருமணத்தில் முடிந்து உள்ளது. 

இளவரசரை திருமணம் செய்ததன் மூலம் கேத் மிடல்டன் இப்போது இங்கிலாந்து இளவரசி ஆகி விட்டார். ராணி எலிசபெத்துக்கு பிறகு பட்டத்து இளவரசரான சார்லஸ் இங்கிலாந்து மன்னராவார். 

சார்லசுக்கு பிறகு அடுத்த பட்டத்து இளவரசரான வில்லியம் இங்கிலாந்து மன்னராகி விடுவார். அப்போது கேத்மிடல்டன் இங்கிலாந்து ராணி ஆக இருப்பார். கேத் மிடல்டன் வயிற்றில் பிறக்கும் முதல் குழந்தைதான் வில்லியமுக்கு பிறகு இங்கிலாந்து நாட்டு மன்னராக வரும். இப்படி ஒரு அதிர்ஷ்டம் யாருக்கும் எளிதாக கிடைத்து விடாது. 

இந்த விஷயத்தில் கேத்மிடல்டன் மிக மிக அதிர்ஷ்டமான பெண் என்றே சொல்ல வேண்டும்.கேத் மிடல்டன் சிறந்த புகைப்பட நிபுணர் ஆவார். 

கல்லூரி படிப்பு முடிந்ததும் அவர் இங்கிலாந்தில் புகழ்பெற்ற புகைப்பட மாரியோ டெஸ்டினோவிடம் புகைப்பட பயிற்சி பெற்றார். மாரியோ டெஸ்டினோ இளவரசி டயானாவுக்கு நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் டயானா மற்றும் இளவரசர்கள் வில்லியம், ஹாரி ஆகியோர் படங்களை பலமுறை எடுத்தவர்.

1 கருத்து: